Showing posts with label பூந்தளிர். Show all posts
Showing posts with label பூந்தளிர். Show all posts

Friday, March 5, 2010

சி.ஐ.டி சிங்காரம் IN டயல் ஒன் நாட் நாட் (CID Singaram)

சி.ஐ.டி சிங்காரம் - ஒரு அறிமுகம்

வாண்டுமாமா படைத்த பல கதாபாத்திரங்களில் என்னை கவர்ந்த ஒரு கதாபாத்திரம் சி.ஐ.டி சிங்காரம் ஆகும். மேலைநாடுகளின் ஷர்லக் ஹோம்ஸ் போன்ற துப்பறியும் கதாபாத்திரங்கள் அழியா புகழுடன் விளங்குவதற்கு காரணம் கதைகளின் விறுவிறுப்பும் சஸ்பென்ஸுமே ஆகும். அத்தகைய ஒரு கதாபாத்திரம் தமிழில் இல்லை என்று வருத்தபடுபவர்கள் வாண்டுமாமாவின் சி.ஐ.டி சிங்காரம் கதைகளை படிக்கலாம். மேலை நாட்டு துப்பறியும் கதைகளில் இருக்கும் அனைத்து விஷயங்களை உள்ளடக்கி அருமையக இந்த கதாபாத்திரத்தை வடிவமைத்து உள்ளார் வாண்டுமாமா. ஒன்று மட்டும் எனக்கு நிச்சியமாய் தெரியவில்லை. ஜெய்சங்கர் இந்த கதாபாத்திரத்தை பார்த்து தனது படங்களுக்கு பெயர் வைத்தாரா அல்லது ஜெய்சங்கர் பார்த்து வாண்டுமாமா இந்த பெயர் வைத்தாரா என்பது தெரியவில்லை. எப்படி இருப்பினும் நமது பேச்சுவழக்கில் சி.ஐ.டி சிங்காரம் மற்றும் சி.ஐ.டி சங்கர் போன்ற பெயர்கள் வழக்கமான ஒன்றாக போய்விட்டது. (C.I.D - Criminal Investigation Department)
 


  பார்வதி சித்திரக்கதை இதழின் 12வது இதழாக வெளியிடப்பட்டது டயல் ஒன் நாட் நாட் (Dial 100). 12 சிறுகதைகள் உள்ளடக்கிய இந்த தொகுப்பில் அனைத்து கதைகளின் வடிவமும் ஒன்றே. சென்னையில் நடக்கும் சிறு சிறு குற்றங்களை சிங்காரம் விசாரித்து சரியான குற்றவாளியை பிடிப்பதே அனைத்து கதைகளின் பொதுவான வடிவம். இந்த சாதாரண கதையமைப்பில் வாண்டுமாமா புகுத்திய புதுமை(தமிழில்) வாசகர்களின் மூளைக்கு வேலை கொடுப்பது. கதையில் ஆங்காங்கே சில வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். நாம் சிறிது யோசித்து விடைகளை யூகிக்க வேண்டும். இந்த யுத்தியால் சதாரண கதை கூட விறுவிறுபடைகிறது. லயன் வாசகர்களுக்கு இந்த யுத்தி 'ஜார்ஜ் நோலன்' மற்றும் இன்ஸ்பெக்டர் ஒருவர் (ட்ரேக்?? பெயர் மறந்து விட்டது) மூலம் ஏற்கனவே பழக்கம் தான் இருந்தாலும் தமிழ் படைப்பில் இத்தகைய விஷயத்தை பார்ப்பது ஒரு புது அனுபவமாக இருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு கதை உங்கள் பார்வைக்கு...






காமிக்ஸ் கதைகளில் லாஜிக் என்பது அவ்வளவாக தேவையில்லை எனினும் துப்பறியும் கதைகளுக்கு ரொம்ப முக்கியம். இந்த கதைகளில் லாஜிக் ஓட்டைகள் மிக மிக குறைவு. ஆனால் இவ்வளவு புகழ் பெற்ற சி.ஐ.டி ஏன் ஜேப்படி திருடர்கள் போன்றவர்களையே வளைத்து வளைத்து பிடிக்கிறார் என்பது தான் புரியவில்லை. 'லம்ப்'பாக எதையாவது பிடிக்க வேண்டாமா. ஷர்லக் ஹோம்ஸ் கதைகளில் வாட்ஸன் போல பாலு எனற உதவியாளர் உள்ளார். இவர் சும்மா பேச்சுதுணைக்கு மட்டும் தான் போல. வேறு எதுவும் உருப்படியாக செய்வதாக தெரியவில்லை. எப்பிடி இருப்பினும் தமிழ் சித்திரக்கதைகளில் ஒரு வித்தியாசமான, சுவையான மற்றும் தரமான ஒரு கதையை கொடுத்த வாண்டுமாமாவிற்கு நன்றிகள். வழக்கமாக ஒருவர் 60 பக்க காமிக்ஸ் கதையை 60 நிமிடங்களில் படித்தால் இந்த கதையை படிக்க கண்டிப்பாக 80 நிமிடங்களாவது ஆகும். காரணம் வாண்டுமாமா உங்கள் மூளைக்கு வேலை கொடுப்பதுதான்.


ரமணி
இந்த கதைக்கு ஓவியம் ரமணி. இதுபோன்ற துப்பறியும் கதைக்கு நுணுக்கமான ஓவியங்கள் மிக அவசியம். அதை சிறப்பாக செய்திருக்கிறார் ரமணி. சிறு சிறு விஷயங்களை கூட தெளிவாக வரைந்துள்ளார். வாண்டுமாமா - செல்லம் கூட்டணிக்கு இனையான கூட்டணி வாண்டுமாமா - ரமணி கூட்டணியாகும். எழுத்துகளும் மிக அழகாக இருக்கிறது. ரமணி பற்றிய மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும். அட்டைபடம் சுப்பு எனபவரால் வரையப்பட்டிருகிறது.

சி.ஐ.டி சிங்காரம் கதைகள் எழுத்து கதை வடிவில் பூந்தளிர் இதழில் வந்துள்ளது. இதே கதைகளை வானதி பதிப்பகம் முழு புத்தகமாக வெளியிட்டுள்ளது. இந்த புத்தகங்களில் சித்திரங்கள் இல்லாதது பெறும் குறை. நண்பர் விஸ்வா சி.ஐ.டி சிங்காரமின் கல்கி இதழ் அவதாரம் பற்றி தனது பதிவில் கூறி உள்ளார்.





வாண்டுமாமா வேறுசில துப்பறியும் கதாநாயகர்களையும் உருவாகியுள்ளார். அதை பற்றி பின்னொரு பதிவில் பார்ப்போம்.

பின்குறிப்பு :
1. கூடுதல் தகவல்களுடன் அமுத நிலையத்தின் புராண சித்திரக்கதைகள் பதிவு update செய்யப்பட்டுளது. படிக்க இங்கே சொடுக்கவும்
பதிவு பற்றிய உங்களுடைய கருத்துகளை கண்டிப்பாக தெரிவிக்கவும்

Saturday, January 23, 2010

கல்கியின் மோகினித்தீவு சித்திரக்கதை(Kalki's Mohini theevu in comics)

வணக்கம் தோழர்களே,


பொன்னியின் செல்வன் படித்த காமிக்ஸ் ரசிகர்கள் பெரும்பாலானோர்க்கு பொன்னியின் செல்வனை சித்திரக்கதை வடிவத்தில் பார்க்கும் ஆசை இருக்கும். அந்த ஆசை இன்னும் நிறைவேறவில்லையென்றாலும் கல்கியின் வேறு ஒரு படைப்பை சித்திரக்கதை வடிவத்தில் பார்க்கும் ஆசை சிறிது நாட்களுக்கு முன் நிறைவேறியது. அதற்கான நன்றியை வாண்டுமாமா அவர்களுக்கும் பூந்தளிர் நிறுவனதிற்கும் செலுத்தவேண்டும்.

" கதை - ஆனந்தி, படம் - வினு " இந்த கூட்டணி பல சித்திரக்கதைகளை கோகுலம் இதழில் படைத்திருக்கிறார்கள். சிறிது நாட்களுக்கு பிறகு இந்த கதைகள் பூந்தளிர் இதழிலும் வெளிவந்தன. அப்போது பூந்தளிர் இதழானது ஒரு சிறிய இடைவெளிக்கு பின் வாண்டுமாமா அவர்களின் மேற்பார்வையில் வெளிவர தொடங்கி இருந்தது. கல்கியின் நூற்றாண்டு விழா ஆண்டான 1999 ல் கல்கியின் மோகினித்தீவு சித்திரக்கதை வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது.



கல்கியின் படைப்புகளில் பொன்னியின் செல்வன் போன்ற நெடுங்கதைகளே மிகவும் பிரபலம். ஆனால் மோகினித்தீவு 100 பக்கங்களுள் அடங்கிவிடக்கூடிய குறுங்கதையாகும். மோகினிதீவு கதை உருவானது பற்றி ஒரு சுவையான தகவலை அவரது மகன் திரு கி ராஜேந்திரன் அவர்கள் மோகினித்தீவின் நாவல் வடிவ புத்தகத்தில் கூறிள்ளார்.

முன்னாள் பிரதமர் நேரு அவர்களின் 60வது ஆண்டு பிறந்தநாள்க்கு ஒரு சிறப்பு மலர் தயாரிக்கப்பட்டது. அதில் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட சிறுகதையே மோகினிதீவு ஆகும். இந்த சிறுகதைதான் பின்னாளில் ஒரு குறு நாவலாக மாற்றி கல்கி இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இந்த கதை ஆயுத குறைப்பு பற்றி குறிப்பிடுவதால் நேருவிற்க்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.



பர்மாவிலிருந்து கப்பலில் வரும் பாஸ்கர கவிராயர் என்பவர் பயனத்தின் இடையே ஒரு மக்கள் வசிக்காத ஒரு தீவினுள் செல்கிறார். பழைய சோழர்கால சிற்ப்பங்களையும் கலை படைப்புகளையும் பார்த்து வியந்துகொண்டிருக்கும் போது அழகே வடிவான ஒரு பெண் மற்றும் ஒரு ஆடவன் அங்கு வருகிறார்கள். அவர்கள் சொல்லும் கதையே மோகினிதீவு. சோழர்கள் காலத்தில் நடந்த பாண்டிய இளவரசிக்கும் சோழ இளவரசனுக்கும் இடையேயான காதல் கதையை அவர்கள் கூறுகிறார்கள். சோழர்களும் பாண்டியர்களும் பகைமை பாராட்டிகொண்டிருந்த நிலையில் அவர்களுடைய காதல் எப்படி நிறைவேரியது என்பதை சுவாரிஸ்யாமாக விளக்குகிறார்கள்.



100 பக்கங்களில் படிப்பதற்க்கு இனிமையாக வழங்கப்பட்டிருக்கும் இந்த கதையை 16 பக்கங்களில் இனிமை குன்றாமல் வழங்குவது என்பது எளிமை அல்ல. இநத முயற்ச்சியில் ஓரளவே வெற்றி பெற்று இருக்கிறார்கள் ஆனந்தி மற்றும் வினு. 16 பக்கம் தான் என்ற கட்டுபாட்டை மீறி இருந்தால் மிகவும் அருமையான ஒரு சித்திரக்கதையை படித்திருக்கலாம் என்பது என் கருத்து. சித்திரக்கதையில் கதை சுருக்கம் படிப்பது போலவே இருக்கிறது. பெரும்பாலான காதல் காட்சிகளை நீக்கிவிட்டே இந்த சித்திரக்கதையை தொகுத்து இருக்கிறார்கள். எனினும் வினுவின் உயிர்ப்பான சித்திரங்களை பார்த்துகொண்டே இருக்கலாம். நீங்கள் மோகினிதீவு நாவல் வடிவத்தை படிக்காமல் இந்த சித்திரக்கதையை படித்தால் சிறப்பான ஒரு கதையாகவே தெரியும்.

கல்கியின் படைப்பை சித்திரக்கதை வடிவில் படிப்பது எனும் எனது ஆசை ஓரளவு நிறவேறியது என்று கூறலாம். எனினும் பொன்னியின் செல்வன் போன்ற கதைகளை சித்திரக்கதை வடிவில் வழங்குவது தமிழ் சித்திரக்கதை உலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்பது என் எண்ணம்.

பதிவை படித்து விட்டு உங்கள் கருத்துகளை வழங்கிடுங்கள்.
 
கல்கியின் மோகினித்தீவு நாவலை online ல் படிக்க இங்கே கிளிக்கவும்

Saturday, November 21, 2009

இன்ஸ்பெக்டர் கருடா (Inspector eagle)

வணக்கம் நண்பர்களே,

ஐந்து தமிழ் காமிக்ஸ் பத்திரிக்கைகளில் இடம்பெற்ற ஒரு இந்திய படைப்பு பற்றி இந்த பதிவு

தமிழ் காமிக்ஸ் உலகில் அனைத்து வகைகளிலும் சூப்பர் ஸ்டாராக திகழ்வது லயன் - முத்து காமிக்ஸ். இந்தியாவின் எந்த மொழியிலும் இல்லாத அளவு விதவிதமான கதைகளை அறிமுகபடுத்திய பெருமை லயன் - முத்து காமிக்ஸ்க்கு உண்டு. ஆங்கிலத்தில் வெளிவராத சில அயல் நாட்டு கதைகளை கூட தமிழ் மொழி வாசகர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். அத்தகைய லயன் - முத்துவில் இந்திய படைப்புகள் இடம் பெறுவது என்பது மிக அறிது. இந்த 'எப்பொழுதாவது வரும்' இந்திய கதைகளில் குறிப்பிட தகுந்த கதை வரிசை இன்ஸ்பெக்டர் கருடா (அல்லது இன்ஸ்பெக்டர் ஈகிள்). கபீஷ், அதிமேதை அப்பு போன்ற படைப்புகளும் லயன்/முத்து வில் இடம்பெறும் இந்திய கதைகளில் குறிப்பிடதக்கவை.

இன்ஸ்பெக்டர் கருடாவின் சித்திரகதைகள் லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ், பூந்தளிர், பார்வதி சித்திரக்கதைகள் மற்றும் விமல் காமிக்ஸ் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளது.

பெரும்பாலும் 20 பக்கங்களில் அடக்கிவிடகூடிய கதைகளே நமது காமிக்ஸ்களில் இடம்பெற்றுள்ளது.
அனைத்து கருடாவின் கதைகளும் " ஒரு குற்றம் - கருடா மற்றும் பல்பீரின் விசாரணை - கொலையாளி பற்றிய குழப்பம் - கருடாவின் துப்பறியும் திறன் மூலம் கொலையாளி சிக்குதல் - சிறிய ஆக் ஷன் - முடிவு " என ஒரே ஃபார்முலாவில் இருப்பதாகவே எனக்கு படுகிறது. ஆனால் அனைத்து கதைகளும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

என்னுடைய கணிப்பு படி லயன்/முத்து இதழ்களில் மொத்தமாக 10 இன்ஸ்பெக்டர் கருடாவின் சித்திரகதைகள் இடம்பெற்றிருக்கலாம். அவற்றில் சில கதைகளின் முதல் பக்கம் உங்கள் பார்வைக்கு...

பாங்க் கொள்ளை - லயன் காமிக்ஸ் வெளியீட்டு எண் - 72 (மீண்டும் ஸ்பைடர்)


 
காணாமல் போன சிப்பாய் - முத்து காமிக்ஸ் வெளியீட்டு எண் - 172 (சைத்தான் சிறுவர்கள்)
(இங்கு இவரது பெயர் இன்ஸ்பெக்டர் ஈகிள், பல்பீரின் பெயர் - ஹவில்தார் நாயக்)


 

விபரீத விருந்து - முத்து காமிக்ஸ் வெளியீட்டு எண் - 278 (மரண மண்)



இவற்றில் விபரீத விருந்து தமிழில் கடைசியாக வெளிவந்த இன்ஸ்பெக்டர் கருடாவின் சித்திரகதையாகும்.
 
இது தவிர ராணி காமிக்ஸில் வெளிவந்த இன்ஸ்பெக்டர் கருடாவின் சித்திரகதையின் முதல் பக்கம்
(புத்தாண்டு விருந்து - ராணி காமிக்ஸ் வெளியீட்டு எண் - 86**)
(இங்கு இவரது பெயர் இன்ஸ்பெக்டர் சம்பத், பல்பீர் செவன் நாட் திரீ என அழைக்கப்படுகிறார்)





 இது தவிர விமல் காமிக்ஸ் எனும் காமிக்ஸ் இதழிலும் இவர் கதையை பார்க்க முடிகிறது. அட்டைபடத்தில்*** கருடா இடம்பெற்றிருப்பதும் இருவண்ணத்தில் தாயாரிக்கப்பட்டிருப்பதும் இவிதழின் சிறப்புகள்.




நான்காவதாக பார்வதி சித்திரக்கதையிலும் தலை காட்டி உள்ளார் கருடா. இங்கு இவரது பெயர் இன்ஸ்பெக்டர் இந்த்ரஜித் ஆகும். 

இன்ஸ்பெக்டர் கருடாவின் படைப்பாளிகள் பற்றிய தெளிவான விபரங்கள் கிடைக்காத நிலையில் நண்பர் ரஃபிக் கொடுத்துள்ள தகவல்கள்படி கதை - ஜகஜிட் உப்பால்(Jagjit Uppal) ஓவியங்கள் - பிரதீப் சட்டே (Pradeep Sathe). வெளிவந்த பத்திரிக்கை Sapthaik Hindustan & Satyakatha *

லயன்/முத்து ஆசிரியர் விஜயன் அவர்கள் இன்ஸ்பெக்டர் கருடாவை பக்க நிரப்பியாகவே உபயோகித்து வந்துள்ளார் என்பது என் என்ணம். ஆனால் 8~9 வருடங்களுக்கு முன் முத்து காமிக்ஸில்(வெ.எண் - 171) வந்திட்ட முத்து மினி காமிக்ஸ் விளம்பரம் இன்ஸ்பெக்டர் கருடாவின் சித்திரகதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தது. ஆனால் அந்த முயற்சி விளம்பரத்தோடு நின்று விட்டது தான் பரிதாபம்.



--- நன்றி ---

Update at 13/03/10 : மேற்கண்ட இதழ்கள் அல்லாமல் பார்வதி சித்திரக்கதை மற்றும் பூந்தளிரிலும் தலை காட்டி உள்ளார் கருடா. இங்கு இவரது பெயர் இன்ஸ்பெக்டர் இந்த்ரஜித் ஆகும். பூந்தளிரில் வெளியான கருடா சாகஸம்.  (விரைவில் பார்வதி சித்திரக்கதை ஸ்கேனும் இடம்பெறும்)


Update at 25/09/2015:  இந்தியில் வெளிவந்த மனோஜ் காமிக்ஸ் தான் கருடாவின் மூலம் என்று தெரிகிறது. அங்கு அவர் பெயர் இன்ஸ்பெக்டர் மனோஜ். (Inspector Manoj - Manoj comics)


 

* தகவல்கள் உபயம் - ரஃபிக்
** அட்டைபடம் உபயம் - டாக்டரின் அ.கொ.தீ.க வலைதளம்
*** scan உபயம் - R T முருகன்