Showing posts with label மணிமேகலை பிரசுரம். Show all posts
Showing posts with label மணிமேகலை பிரசுரம். Show all posts

Thursday, July 19, 2012

நல்லதங்காள் கதைச்சுருக்கமும் சில சித்திரங்களும்

நல்லதங்காள் கதைச்சுருக்கம்:


நல்லதங்காள் பிறப்பு மற்றும் திருமணம்:
மதுரை பட்டணத்தை ஆட்சி செய்து வந்தார் ராமலிங்கன் எனும் அரசர். அவரின் மனைவி இந்திராணி. அவர்களுக்கு பிறந்த முதல் குழந்தை நல்லதம்பி. அவனின் தங்கையாக பிறந்தவள் தான் நல்லதங்காள். நல்லதம்பி இளைஞனாக உருவெடுத்தபின் மூளியலங்காரி என்னும் பெண்ணிற்கு மணம் முடித்து வைத்தனர் அவனின் பெற்றோர். மூளியலங்காரிக்கு நல்லதங்காளை அவ்வளவாக பிடிக்காது. ஆனால் நல்லதம்பி அளவு கடந்த பாசத்தை தன் தங்கை மீது வைத்துள்ளான். சிறிது காலத்திற்குப்பின் ராமலிங்கன் தான் மூப்படைந்ததால் அரச பொறுப்புகளை தன் மகனிடம் ஒப்ப்டைத்துவிட்டு இயற்கை ஏய்தினார். இந்திராணியும் சிறிது நாட்களில் இயற்கை ஏய்தினார்.
பிறகு நல்லதங்காளுக்கு காசிராஜன் என்னும் அரசனை வெகு விமர்சையாக திருமணம் செய்து வைத்தான் நல்லதம்பி. நல்லதங்காளும் காசிராஜனும் இனிமையான மண வாழ்க்கையை வாழ்ந்தனர். ஆண்டுக்கு ஒன்று வீதமாக ஏழு குழந்தைகளை பெற்றெடுத்தாள் நல்லதங்காள்.

காசிமாநகரில் பஞ்சம்:
பிறகு காசிராசனின் நாட்டில் (காசிமாநகர்) கடும் பஞ்சம் வந்தது. காசிராசனின் வீட்டில் இருந்த தானியங்கள் அனைத்தும் தீர்ந்து போனது. கணவனின் பேச்சையும் மீறி தன் சகோதரனின் வீட்டிற்கு ஏழு குழந்தைகளுடன் புறப்படுகிறாள் நல்லதங்காள். தன் தாய் வீட்டிற்கு செல்லும் வழியில் காடு ஒன்றில் வழி தவறுகிறாள். ஆனால் இதை தன் கனவு ஒன்றின் மூலம் ஊகித்த நல்லதம்பி ஏப்படியோ அவளை கண்டுபிடிக்கிறான். கண்டுபிடித்தபின் தன் தங்கையை முதலில் தன் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறான். அவன் சிறிது நேரம் கழித்து வருவதாகக் கூறுகிறான்.

நல்லதம்பி வீட்டில் நல்லதங்காள்:
தன் தாய்வீட்டை அடைந்த நல்லதங்காளுக்கு அவளின் அண்ணி கதவை திறக்காமல் புறக்கணிக்கிறாள். வேதனையுற்ற நல்லதங்காள் தன் புனிதத்தின் மேல்கொண்ட சாபத்தினால் கதவைத்திறந்து உள்ளே செல்கிறாள். அங்கு குழந்தைகள் அங்கும்மிங்கும் ஓடியாடி அங்கிருந்த பழங்களை உண்ண ஆரம்பித்தனர். இதனை கண்ட நல்லதங்காள் அண்ணி அக்குழந்தைகளை அடித்து துன்புறுத்த ஆரம்பித்துவிட்டாள். மனம் நொந்த நல்லதங்காள் தன் குழந்தைகளுடன் அண்ணன் வீட்டிலிருந்து அண்ணனின் வருகைக்கும் காத்திறாமல் வெளியேருகிறாள்.

நல்லதங்காள் முடிவு:
வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்று அங்கு மாடு மேய்ப்பவர்களிடம் இங்கு பாழுங்கிணறு எங்குள்ளது எனக் கேட்டு ஒரு பாழுங்கிணறு சென்றடைகிறாள். பஞ்சம், அண்ணியின் புறக்கணிப்பு, குழந்தைகளின் பசி ஆகியவற்றால் வேதனை அடைந்து அக்கிணற்றிலே குழந்தைகளை போட்டு தானும் குதித்து விடுகிறாள்.
இதனை அறிந்த நல்லதம்பி கடும் வேதனையும் தன் மனைவி மீது கோபமும் அடைகிறான். மூளியலங்காரியை கொன்றுவிட்டு தானும் மரணத்தை அடைகிறான். இதனிடையில் காசிநாட்டில் பஞ்சம் நீங்கி காசிராஜன் நல்லதங்காளை தேடி வருகிறான். ஆனால் அவன் கேள்விப்பட்ட செய்திகளின் துயரம் தாங்காமல் அவனும் தற்கொலைக்கு முயற்சிக்கிறான். அப்போது இவர்களின் நல்ல உள்ளம் அறிந்த சிவபெருமான் அனைவருக்கும் மீண்டும் உயிரூட்டுகிறார்.

நல்லதங்காள் சில சித்திரங்கள்:
இங்கிருக்கும்  ஓவியங்கள் http://www.tamilheritage.org/ எனும் தளத்தில் வலையேற்றம் செய்யப்பட்டுள்ள ஒரு புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகம் புகழேந்தி புலவரால் இயற்றப்பட்டுள்ளது. உரைநடைக்கும் செயுள்நடைக்கும் இடைப்பட்ட ஒரு நடையில் ஒரு நடையில் இந்த புத்தகம் இயற்றப்பட்டுள்ளது. புத்தகம் வெளிவந்த ஆண்டு தெரியவில்லை. கோவில்களில் வரையப்படும் ஓவியங்கள் பாணியில் சித்திரங்கள் உள்ளன. மிகவும் நுணுக்கமான மற்றும் நேர்த்தியான சித்திரங்கள்.  சித்திரக்கதைகளுக்கு பொருத்தமான பாணி என்று எண்ணுகிறேன். ஓவியர் பெயர் இல்லை.

புத்தகத்தின் முதல் பக்கம்

நல்லதங்காளுக்கும் காசிராஜனுக்கும் வெகுவிமர்சையாக திருமணம் நடக்கும் காட்சிகள்


காசிநாட்டில் பஞ்சம்

கணவன் சொல்லை மீறி ஏழு குழந்தைகளுடன் தன் அண்ணன் வீட்டிற்கு புறப்படும் நல்லதங்காள். அப்போது தோன்றிய கெட்ட சகுனங்களும் பட்டத்தில் காட்டப்பட்டிருக்கிறது

தன் அண்ணன் வீட்டு வாசலில் நல்லதங்காளும் அவள் குழந்தைகளும். உள்ளிருக்கும் காவலாளியிடம் அண்ணியிடன் தான் வந்திருப்பதாக எடுத்துக்கூற சொல்லி வேண்டுகோள் விடுக்கும் காட்சி

அண்ணன் வீட்டில் நல்லதங்காளின் குழந்தைகள் அவள் அண்ணியினால் துன்புறுத்தப்படும் காட்சி

அண்ணன் வீட்டில் இருந்து வெளியேறிய பின் பாழுங்கிணறு எங்குள்ளது என்று மாடு மேய்க்கும் ஆட்களிடம் நல்லதங்காள் கேட்கும் காட்சி.
(பிறகு இவர்களிடம் விசாரிப்பதன் மூலமாகத்தான் நல்லதம்பி நல்லதங்காள் கிணற்றில் இறங்கிய இடத்தை கண்டுபிடிக்கிறான்)

குழந்தைகள் ஒவ்வொன்றையும் கிணற்றில் போடும் காட்சி. ஒரு பையன் மட்டும் தனக்கு சாக பிடிக்கவில்லை என்று விலகி ஓடுகிறான். (அவனையும் விரட்டிப்பிடித்து கிணற்றில் போடுவதாக செல்கிறது கதை)

நல்லதம்பி தன் தங்கை மற்றும் தங்கை குழந்தைகளின் சடலங்களை கிணற்றில் இருந்து மீட்டு எரிக்கும் காட்சி

தன் மனையிடம் கடுங்கோபத்துடன் தங்கை பற்றி விசாரிக்கும் நல்லதம்பி

நல்லதம்பியும் காசிராஜனும் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் காட்சி.
(இருவரின் கையிலும் கத்தி இருப்பதை கவனிக்க)


நல்லதங்காள் கதையானது நாட்டாரியல் கதை என்று வகைப்படுத்தப்படுகிறது. இன்றும் சில கிராமங்களில் வாய்வழியாக இந்த கதை சொல்லப்பட்டு வருகிறது. நான் படித்த மணிமேகலை பிரசுரத்தின் புத்தகத்தில் இது ஒரு அரச குடும்ப கதையாக சொல்லப்படுகிறது. இணையத்தின் சில இடங்களில் சாதாரண குடும்ப கதையாகவும் சொல்லப்படுகிறது.



கதை இணையத்தில் படிக்க... இணைப்பு1இணைப்பு2.
tamil heritage தளத்தில் படிக்க 
மணிமேகலை பிரசுரத்தில் புத்தகமாக வாங்கிப்படிக்க

Thursday, July 22, 2010

தமிழ்வாணன் - சில சித்திர துளிகள் (Tamilvannan and comics)

வணக்கம் நண்பர்களே,

வீடு மாற்றம், கால்பந்து மற்றும் BSNL லின் "அற்புத" சேவை ஆகிய காரணங்களால் சிறிது நாட்களாக பதிவிட முடியவில்லை. தமிழ் எழுத்தாளர்களில் தமிழ்வாணன் அவர்கள் மிக முக்கியமானவர். மிக வித்தியாசமானவர் கூட. தமிழில் துப்பறியும் நாவல்களை பிரபலப்படுத்தியவர் இவர்தான் என கூறலாம். நாவல் உலகின் நட்சத்திரமாக விளங்கிய தமிழ்வாணன் ஒருசில சித்திரக்கதைகளையும் படைத்திருப்பதாக அறிகிறேன். இவருடைய சித்திரக்கதைகளுக்கும் சரி நாவல்களிலும் சரி ஓவியர் ராமுவின் கைவண்ணமே அதிகம் தென்படுகிறது. இதோ என் கையில் கிடைத்த தமிழ்வாணனின் சித்திரக்கதை இதழின் சில பக்கங்கள்....

 

சென்னையில் படித்துகொண்டிருக்கும் சிங்கப்பூர் தொழிலதிபரின் மகன் துரைவேல் கப்பல் ஒன்று மூலமாக ஊருக்கு திரும்புகிறார். கப்பல் போய்கொண்டிருக்கும் போது சிறிய புயல் ஒன்று கப்பலை தாக்குகிறது. ஆனாலும் கப்பல் எந்த பாதிப்பும் இல்லாமல் தப்புகிறது. ஆனால் புயல் ஓய்ந்தபின் துரைவேலை காணவில்லை. துரைவேல் இல்லாமலே கப்பல் சிங்கப்பூர் அடைகிறது. துரைவேல் என்ன ஆனார்?? உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை சுவையாக சொல்லி இருக்கிறார் தமிழ்வாணன். ராமுவின் அற்புதமான சித்திரங்களில் இந்த கதை ஒரு சிறந்த தமிழ் சித்திரக்கதையாக விளங்குகிறது. கதையில் எதிர்பாராத திருப்பங்களுக்கு பஞ்சம் இல்லை. ஒரு குரங்கானது முக்கிய பாத்திரத்தில் வருகிறது. அதன் தியாக உள்ளம் மற்றும் உதவும் குணம் நெஞ்சை தொடுவதாக இருக்கிறது. தமிழில் படைக்கப்பட்ட சித்திரக்கதைகளில் முக்கிய இடம் "திரும்பி வரவில்லை" க்கு கண்டிபாக உண்டு. இந்த இதழின் அட்டைபடமும் அட்டகாசமான ஒன்று. இவ்விதழின் சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு...




 
தமிழ்வாணனின் துப்பறியும் நாவல்கள்:


'மனசில என்ன துப்பறியும் புலி சங்கர்லால் என நினைப்போ' என்று பேச்சு வழக்கில் வரும் அளவிற்கு சங்கர்லால் புகழ் பெற்ற ஒரு துப்பறியும் கதாநாயகனாக விளங்கினார்.பழைய கல்கண்டு இதழ்களில் சங்கர்லால் எனும் பாத்திரம் உயிருடன் உலாவது போன்றே தகவல்கள் வருமாம். முதலில் சங்கர்லால் துப்பறியும் நாவல்களை எழுதிய தமிழ்வாணண் பிறகு அவரது நாவல்களில் தானே நாயகன் ஆகிகொண்டார். (தற்போதைய தமிழ் இயக்குனர்கள் போல). தனித்தனி புத்தகங்களாக வெளிவந்த சங்கர்லால் புத்தகங்கள் தற்போது மூன்று தொகுதிகளாக அட்டகாசமான வடிவமைப்பில் விற்பனைக்கு கிடைக்கிறது. பழைய சில புத்தகங்களில் சில இன்னும் தனி நாவலாக கிடைக்கிறது. அவற்றில் சிலவற்றின் அட்டைபடங்கள்..

 
தமிழ்வாணன் எழுதிய பல நாவல்கள் கல்கண்டு புத்தகத்தில் தொடராக வந்தவையே.. அத்தகைய தொடர்களில் ஓவியர் ராமுவின் கைவண்ணங்கள்...

 






கனவுகளின் காதலர் சீறிபாயும் கார்கள் பற்றி கூறியிருந்தார். பழைய கல்கண்டு புத்தகங்களை புரட்டி பார்த்ததில் ஓவியர் ராமுவின் கைவன்ணத்தில்  நிறையவே கார்கள் சீறுகின்றன. சில படங்கள்..

AMIT என்ற காமிக்ஸ் இதழில் சங்கர்லால் கதைகள் சித்திரக்கதைகளாக மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. இங்கே இருக்கும் இதழ்கள் தவிற வேறு சில சங்கர்லால் சித்திரக்கதைகளும் வெளியிடப்படிருப்பதாக நண்பர் விஸ்வா ஒருமுறை கூறினார்.


பின்குறிப்பு : இது திரு தமிழ்வாணன் பற்றிய முழு தகவல் களஞ்சியம் அல்ல. என்னிடம் இருக்கும் தமிழ்வாண்னின் படைப்புகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியே. தமிழ்வாணனின் சித்திரக்கதை முயற்சிகள் பற்றி வேறு தகவல்கள் இருப்பின் பின்னூட்டம் மூலம் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

Thursday, December 10, 2009

சித்திரக்கதையில் அப்புசாமி (Appusami in comics)

வணக்கம் நண்பர்களே, தமிழ் இலக்கிய உலகில் சற்று பின்தங்கிய நிலையில் இருப்பது நகைச்சுவை இலக்கியம் தான் என்பது என் கருத்து. (அடுத்ததாக குழந்தைகள் இலக்கியம்) அரிதான நகைச்சுவை கதைகளில் மிகவும் முக்கியமான கதை வரிசை அப்புசாமி - சீதாப்பாட்டி கதை வரிசையாகும். குமுததின் முக்கிய இலக்கியவாதியான பாக்கியம் ராமசாமியால் படைக்கப்பட்ட இப்பாத்திரங்கள் இன்றளவும் தமிழக மக்களால் ரசிக்கப்படுகிறார்கள்.


பெரும்பாலும் சிறுகதை / நாவல் வடிவத்திலேயே எழுதப்பட்ட இக்கதைவரிசை அவப்போது சித்திரக்கதை வடிவிலும் வந்துள்ளது. அதில் என் கைக்கு சிக்கிய ஒரு புத்தகத்தை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்

1993 யில் (1997இல் மறுபதிப்பு) மணிமேகலை பிரசுரம் வெளியிட்டுள்ள 52 பக்கங்கள் கொண்ட "அப்புசாமியின் கலர் டி.வி" சித்திரக்கதை புத்தகத்தின் அட்டைபடம் உங்கள் பார்வைக்கு.


இந்த இதழுக்கு சித்திரங்கள் வரைந்திருப்பது ஓவியர் ஜெயராஜ் ஆகும். இதுவரை வெளிவந்துள்ள அனைத்து அப்புசாமியின் கதைகளுக்கும் சித்திரம் வரந்திருப்பது இவரே. புத்தகதிற்கு லேனா தமிழ்வாணன் எழுதிய முன்னுரையும் இதழின் சில பக்கங்களும் உங்கள் பார்வைக்கு.






கதையில் எம்.ஜி.ஆர் தோற்றம்

அப்புசாமி கலர் டி.வி க்கு ஆசைப்பட்டு அதனால் சீதாப்பாட்டிக்கு வந்திடும் தொல்லைகள் பற்றியே கதை. நகைச்சுவைக்கு சிறிதும் பஞ்சம் இல்லாது கதை போகிறது. நிறைய இடங்களில் வாய்விட்டு சிரிக்கலாம். சித்திரக்கதையானாலும் பெரியவர்களையும் கவரும் விதமாகவே கதை பின்னப்பட்டுள்ளது. புத்தக வடிவமைப்பை பார்க்கும் போது இந்த கதை ஏற்கனவே வார இதழ் ஏதோ ஒன்றில் வந்த கதை போல் இருக்கிறது. குமுதமாக இருக்க கூடும். ஓவியர் ஜெயராஜ் கவர்ச்சியாக படம் வரைவதில் புகழ்பெற்றவர். அவரின் ரசிகர்களுக்காக ஒரு படம்.

இந்த இதழை பொறுத்த வரை மகிழ்ச்சியான மற்றும் சோகமான செய்தி என்னவென்றால் இன்னும் இப்புத்தகம் பதிப்பகத்தாரிடம் ஸ்டாக் இருப்பதே. இன்றும் இப்புத்தகதை வாங்கலாம் என்பது மகிழ்ச்சியான விஷயம் என்றாலும் ஒரு சித்திரக்கதை இதழ் 12 வருடங்களாக விற்பனையாகாமல் இருப்பது ஆரோக்யமான செய்தி அல்ல.....

- - - இதழின் விலை ரூ.10 மட்டுமே. இதழை வாங்க 044 - 24342926 க்கு தொடர்பு கொள்ளவும் - --

(இந்த இதழுடன் வேறு சில சித்திரக்கதை புத்தகங்களையும் மணிமேகலை பிரசுரத்தில் வாங்கி உள்ளேன். அவற்றை பின் வரும் பதிவுகளில் எழுதலாம் என்று உள்ளேன்)
எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி

அப்புசாமி - சீதா பாட்டி

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பிற்சேற்கை 1 - ஓவியர் ஜெயராஜ் அவர்கள் அப்புசாமி - சீதாப்பாட்டி கதை வரிசைக்கு ஓவியம் வரைந்ததை மிகவும் பெருமையாக் குறிப்பிடுகிறார். ஓவியர் ஜெயராஜ் அவர்கள் பற்றி தினமலர்-வாரமலர் இதழில் தொடர் கட்டுரை வந்தது. அதில் சீதாப்பாட்டி, அப்புசாமி பற்றி அவர் கொடுத்துள்ள செய்தி மற்றும் பேட்டி.

                        
கேள்வி : சீதாப்பாட்டி, அப்புசாமி தாத்தா என்ற மறக்க முடியாத உருவங்களை, நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள். அவர்கள் உருவான கதை பற்றி?

பிரபல எழுத்தாளரும், குமுதத்தின் முன்னாள் உதவி ஆசிரியருமான ஜ.ரா.சுந்தரேசன், காலத்தால் அழியாத, மறக்க முடியாத இரு பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார்.

                  ஓவியர் ஜெயராஜ்
அப்புசாமியை வைத்து முதல் கதை எழுதியபோது, என்னிடம், "நல்ல பழுத்த கிழம், நல்ல புத்தி உள்ள ஒரு கேரக்டரை வைத்து கதை எழுதப் போகிறேன்...' என்றார். கொஞ்சம் யோசித்து தாத்தா உருவத்தை வரைந்தேன். சுந்தரேசன் சாருக்கு ரொம்ப பிடித்து போய்விட்டது. உடனே அந்த டிராயிங்கை ஆசிரியர் எஸ்.ஏ.பி.,யிடம் காண்பித்தார்.


அவரும், "ரொம்ப பொருத்தமாக இருக்கு. அப்படியே போடுங்க...' என்று உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து ஜ.ரா., சொல்லாமலே நானே, அந்த தாத்தாவிற்கு ஒரு ஜோடியாக, வயதான பாட்டியின் படம் வரைந்தேன். அதுவும் அவர்களுக்குப் பிடித்துப் போயிற்று.

அப்புசாமி தாத்தாவின் முகத்தையே, சீதாப்பாட்டிக்கும் போட்டேன். அதற்கு மேலே தலைமுடி, மூக்குக் கண்ணாடி, குங்குமம் என்று சில எக்ஸ்ட்ரா விஷயங்களை வரைந்தேன். வாசகர்களுக்கும் இரு உருவ அமைப்புகளும் மிகவும் பிடித்து விட்டன. கிளாமராக நான் வரைந்த இளம் பெண்களின் படங்களை விட, எனக்கு அதிகமான அங்கீகாரம், புகழ்பெற்றுக் கொடுத்தது, அப்புசாமி - சீதாப்பாட்டி என்பது தான் மறுக்க முடியாத உண்மை. தமிழ்ப் பத்திரிகை உலகில், சாகாவரம் பெற்ற இரு பாத்திரங்கள். அவர்கள் ஏற்கனவே நல்ல வயதானவர்கள் என்பதால், அவர்களுக்கு இனி வயதாகாது. இவர்களின் உருவங்களைத் தான், நான் என் விசிட்டிங் கார்டில், ஒரு ஓவியன் என்று சட்டென்று விளங்க, உபயோகப்படுத்துகிறேன்.

சிறுகதை, தொடர்கதை, சித்திரக்கதை என்ற மூன்று வடிவங்களிலும் வந்திருக்கும் ஒரே கதை (நான் அறிந்தவரை) சீதாப்பாட்டி - அப்புசாமி கதை. குமுதம் முன்னாள் உதவி ஆசிரியர் ஜ.ரா.சுந்தரேசன், பாக்கியம் ராமஸ்வாமி (அவரது பெற்றோர் பெயரில்) என்ற பெயரில் எழுதிய அந்தக் கதைக்கு, ஆரம்பம் முதலே படம் வரையும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

பல ஆண்டுகள் குமுதத்திலும், பிறகு விகடன், குங்குமம், கல்கி என்று பல பத்திரிகைகளிலும் அப்புசாமி கதைகள் வந்தன. எந்த பத்திரிகையில் அப்புசாமியின் கதை வந்தாலும், அதற்கு படம் போடும் வாய்ப்பை, தொடர்ந்து எனக்கே கொடுத்தனர். இதுவும் ஒரு வகை சாதனை தான்!

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பிற்சேற்கை 2 - அப்புசாமி காமிக்ஸ் பற்றி ஏற்கனவே லக்கிலூக் வலைதளத்தில் விவாதம் நடந்துள்ளது. இங்கு ஒரு அப்புசாமி - சீதாப்பாட்டி சித்திர சிறுகதையும் நீங்கள் படிக்கலாம். அதற்க்கான தொடர்பு


கிழக்கு பதிப்பகத்தினர் அப்புசாமியின் கதைகளை சித்திரக்கதைகளாக வெளியிட போவதாக கூறி இருந்தனர். அதற்க்கான தொடர்பு

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பதிவினை படித்துவிட்டு உங்கள் கருத்தை கூறிவிடுங்கள்