Wednesday, February 22, 2023

உங்கள் ஊரின் ஈர நிலங்கள்

ஈர நிலம் என்றால் என்ன? 

நீரும் நிலமும் சந்திக்கும் இடமே ஈர நிலமாகும். கடற்கரைகள், ஆற்றங்கரைகள், ஏரிக்கரைகள், சதுப்பு நிலங்கள், அலையாத்திக்காடுகள் போன்றவை ஈர நிலங்கள் ஆகும். விதைப்புக்கு முந்தைய நெல் வயல், மழை  நீர் தேங்கிய நிலங்கள் ஆகியவையும் குறுகியகால ஈர நிலங்கள் என்று கூறலாம். 

சிவகங்கை அருகில் உள்ள ஒரு நீர்நிலை. கிட்டதட்ட 10 வகை பறவைகள்  இப்புகைப்படத்தில் உள்ளன. 


ஈர நிலங்கள் ஏன் முக்கியமானவை. அவற்றின் பயன்கள் என்ன? 

வளமான நீர் வளத்திற்கு ஈர நிலங்கள் முறையாக இருக்க வேண்டும். சில பத்து ஆண்டுகள் முன் வரை குடிநீராகப் பயன்பட்டு வந்த பல நீர் நிலைகள் பல இன்று கால் வைக்கக் கூட தகுதியற்றதாக உள்ளதைப் பார்க்கிறோம். இது நாம் ஈர நிலங்களை முறையாக பராமரிக்காததால் வந்த விளைவு. நீர் வளம் தவிர மீன் வளம், விவசாய வளம் போன்ற அனைத்திற்கும் ஈர நிலங்கள் பங்களிக்கிறது. இது அல்லாமல் அழிவின் விளிம்பில் இருக்கும் பல்வேறு பறவைகள், மற்றும் உயிரினங்களின் தாய்வீடாக ஈர நிலங்கள் உள்ளன. ஈர நிலங்கள் போன்ற இயற்கை பில்டர்கள் (filters -  சுத்தகரிப்பன்கள்) ஏதும் இல்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இயற்கையான வகையில் கிடைத்து வந்த குடிநீரைக் காசு போட்டு கேன்களில் மட்டுமே வாங்கும் நிலை வருவதற்கு ஈர நிலங்கள் சரியாக பராமரிக்கப்படாதது ஒரு முக்கிய காரணம் ஆகும்.

வளர்புரம் ஏரிக்கரை. இந்த ஏரியில் இதுவரை 116 வகை பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 


தமிழர்களும் ஈர நிலங்களும்: 

தமிழர்கள் சங்கிலித்தொடர் ஏரிகளை உருவாக்கி மிகச்சிறப்பாக நீரை மேலாண்மை செய்துள்ளனர் என்பது வரலாறு. ஆற்று நீரை வரிசையாக ஆறு --> ஏரி --> கண்மாய் --> கரனை--> தாங்கல் -->  ஊரணி --> குளம் -->குட்டை வரை செலுத்தி நிலத்தை வளப்படுத்தி உள்ளனர். இதில் பல அமைப்புகள்  இன்றும் பல ஊர்களில் பயன்பாட்டில் உள்ளன. பராமரிப்பு பணிகளையும் முறை வைத்து ஊர்மக்களே சிறப்பாகக் கவனித்து வந்துள்ளனர்.    (தமிழர்களின் நீர் மேலாண்மையின் சிறப்புகளை இன்னும் விரிவாகத் தெரிந்துகொள்ள நக்கீரன் அவர்களின் "நீர் எழுத்து " என்று நூலை ஆர்வம் உள்ளவர்கள் வாசிக்கலாம். ஆனால் இன்று நம் ஈர நிலங்கள் பலவும் குப்பைகள் கொட்டும் இடமாக மாறி உள்ளன . இதற்குச் சூழல் மீது அக்கறையின்மை, விவசாயம் குறைந்தது, மக்களிடம் ஒற்றுமையின்மை, நம் நீர் உரிமைகள் மீதான அறியாமை ஆகியவை காரணமாகச் சொல்லலாம்.


ஏரி பொறம்போக்கு:

பல ஏரிகள் ஏரி பொறம்போக்கு என்ற நிலப்பரப்பை கொண்டிருக்கின்றன. இந்த நிலப்பரப்பு மழை காலங்களில் தண்ணீர் தேங்கியிருக்கும் நிலமாகவும் கோடை காலங்களில் வறண்டு புல் மற்றும் சில தாவரங்கள் வளர்ந்த நிலையிலும் இருக்கும். இந்நிலங்கள் மழை காலங்களில் ஊருக்குள் வெள்ளம் வராமல் தடுப்பதற்கும் கூடுதல் தண்ணீரை தேக்கி வைக்கவும் பயன்படுகிறது. மேலும் ஏரியை சார்ந்து இருக்கும் பல்வேறு பறவைகள் கூடு கட்டவும் இவ்விடம் பயன்படுகிறது. முயல், கீரி, உடும்பு போன்ற உயிரினங்களும் இந்நிலப்பரப்பில் வசிக்கின்றன.

ஆனால் இந்த நிலப்பகுதியே பல்வேறு ஆக்கரமிப்பிற்கு உள்ளாகிறது. (அரசு அமைப்புகள் உட்பட) ஏரிகள் பாதுகாப்பின் மீது இருக்கும் ஓரளவு விழிப்புணர்வு கூட இந்த ஏரி பொறம்போக்கு நிலங்கள் மேல் இல்லாதது வருத்தமே.

ஏரிப்புறம்போக்கு பகுதியில் மூவண்ண சில்லைகள்

ஏரிப்புறம்போக்கில் மஞ்சள் மூக்கு ஆள்காட்டிகள் (தரையில் முட்டையிடும் பறவை)


உங்கள் ஊரின் ஈர நிலங்கள்: 

நீங்கள் வசிக்கும் பகுதியின் அருகில் உள்ள ஈரநிலங்களை அறிந்துகொள்வது மிக அவசியம். அங்கு இயற்கையை அவதானிக்கும் செயல்களை செய்யலாம். நான் வசிக்கும் திருப்பெரும்புதூர் பகுதியின் ஈர நிலங்கள் பற்றிய என் புரிதல் கீழே..

திருப்பெரும்புதூர் ஊரானது ஏரிகள் சூழ உள்ள ஒரு ஊராகும். திருப்பெரும்புதூர் ஏரி ஊரின் முக்கிய ஏரியாகும். மேலும்   திருப்பெரும்புதூர் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் பல ஏரிகள் உள்ளன. பென்னலூர் இரண்டு ஏரிகள், பிள்ளைப்பாக்கம் ஏரி, நெமிலி மூன்று ஏரிகள், இருங்காட்டுக்கோட்டை ஏரி, காட்ராம்பாக்கம் ஏரி, நாவலூர் ஏரி, தண்டலம் ஏரி, வளர்புரம் ஏரி ஆகியவை திருப்பெரும்புதூர் சுற்றி உள்ள முக்கிய ஏரிகளில் சில ஆகும். இந்த சங்கிலித்தொடர் ஏரிகள் பல ஆண்டுகளாக மக்களுக்கு நீர் ஆதாரமாகவும் பல்வேறு உயிரினங்களுக்கு வாழிடமாகவும் இருந்துவந்துள்ளன. இன்றும் இந்த ஏரிகளில் வெளிநாடுகளிலிருந்து வலசை வரும் வகையான உட்பட பல்வேறு வகையான பறவைகளைப் பார்க்கலாம். பல்வேறு ஊர்களிலிருந்து பறவை ஆர்வலர்கள் இப்பகுதிக்குப் பறவைகள் நோக்க வருவது வழக்கம். இத்தகைய சிறப்புகள் உள்ள நம் ஈர நிலங்கள் இன்று மனிதர்களின் செயல்களால் பல்வேறு வகையான சிக்கல்களுக்கு உள்ளாகின்றன. அவற்றில் சில....

1. குப்பைகள் கொட்டுதல்

2. கழிவு நீர் கலத்தல்

3. சீமைக்கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை  போன்ற ஆக்கிரமிப்பு தாவரங்கள் மிகுதியாக வளர்தல்

4. ஆக்கிரமிப்பு கட்டடங்கள்

5. நீர் வழிகள் அடைப்பு / ஆக்கிரமிப்பு

6. அளவுக்கு அதிகமான மீன் பிடிப்பு

7. மண் எடுத்தல்

ஏரிக்கரை அருகில் கட்டுமான வேலைகள்


நாம் என்ன செய்ய வேண்டும்? 

நம் நீர் நிலைகள் மற்றும் ஈர நிலங்கள் இது போன்ற இன்னல்களுக்கு ஆளாகையில் நாம் என்ன செய்யலாம்:

1. குப்பைகளை நீர் நிலைகளில் கொட்டக் கூடாது.

2.  கழிவு நீர் கலத்தல், ஆக்கிரமிப்புகள், மண் எடுத்தல் போன்ற செயல்களைத் தனி ஒருவராகத் தடுப்பது கடினம். ஆகையால் குழுவாக உரிய அதிகாரிகளுக்குத் தெரிவித்தல், கிராம சபைக் கூட்டங்களில் எதிர்ப்பு தெரிவித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் தடுக்கலாம். 

3. பனை, நீர்மருது போன்ற மரங்களைக் கரை ஓரங்களில் வளர்க்கலாம்.


ராம்சர் சாசனமும் ஈரநிலமும்

ராம்சர் சாசனம் (Ramsar Convention) என்பது, ஈரநிலங்களின் பாதுகாப்பு, அவற்றின் தாங்குநிலைப் பயன்பாடு என்பவை தொடர்பான ஒரு பன்னாட்டு ஒப்பந்தம் ஆகும். 1971ல் இவ்வொப்பந்தம் ஈரானில் உள்ள ராம்சர் என்னும் நகரில் கையெழுத்தானது. இந்த நகரின் பெயரைத் தழுவியே ராம்சர் சாசனம் என்னும் பெயர் ஏற்பட்டது.

ஈரநிலப் பாதுகாப்புக்காக பன்னாட்டுத் தரம் ஒன்றை உருவாக்குவதன் மூலமும், உலகளாவிய ஈரநிலம் தொடர்பான பிரச்சினைகளை அலசுவதற்கு ஒரு களத்தை வழங்கியதன் மூலமும், ஈரநிலங்கள் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், ஒன்றிணைந்து பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குமான வசதியை இச்சாசனம் ஒப்பந்தத் தரப்பினருக்கு வழங்குகிறது. 

(புரிதலுக்காக - மிக முக்கியமான ஈரநிலங்களுக்கு மட்டுமே ராம்சார் அந்தஸ்து வழங்கப்படும். இவை மட்டுமே ஈரநிலங்கள் என்று எடுத்துக்கொள்ள கூடாது)

தமிழ் நாட்டில் ராமசார் ஈரநிலங்கள்
(Photo Source - www.tnswa.org)


உலக ஈர நில(Wetland) நாள் – பிப்ரவரி 02 

ஈரநிலங்கள் பூமிக்கு ஆற்றும் முக்கிய பங்கு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சதுப்பு நிலத்தின் முக்கியத்தும் குறித்து மக்கள் அறிந்து கொள்ளவும் ஆண்டு தோறும் பிப்ரவரி 02 தேதி அன்று உலகம் முழுவதும் ஈர நாள் கொண்டாடப்படுகிறது.


இக்கட்டுரை பற்றி..

திருப்பெரும்பூதூரின் சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் வகையில் அரண்  நண்பர்களுடன் இணைந்து பல்வேறு சூழல் செயல்பாடுகள் செய்துவருகிறோம். அரண் அமைப்பிற்காக கடந்த பிப்-2 World's wetland day க்காக எழுதப்பட்ட விழிப்புணர்வு கட்டுரை சில மாற்றங்களுடன் இங்கு பதிவிடப்படுகிறது..

ஈர நிலங்களை பாதுகாப்போம்! இயற்கையைப் போற்றுவோம்!

-

Sunday, January 22, 2023

எழில்வனம் பறவைகள் கணக்கெடுப்பு

அனைவருக்கும் வணக்கம். "

"திருப்பெரும்புதூர் அருகில் அரண் தன்னார்வலர்கள் அமைப்பு 'எழில்வனம்' என்கிற குறுங்காடு ஒன்றை வளர்த்து வருகிறது. இதில் பல்வேறு வகையான மரங்ககளை வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கிருக்கும் உயிர்ச் சூழலை தொடர்ந்து கண்காணித்தும் அவனப்படுத்தியும் வருகிறோம். அதன் ஒரு பகுதியாக பறவைகள் கணக்கெடுப்பு 8.01.2023 அன்று நடத்தப்பட்டது. அதன் பொருட்டு எழுதப்பட்ட கட்டுரை.

எழில்வனத்தில் பறவை பார்த்தல் அனுபவம்

வணக்கம். நம் எழில்வனத்தின் உயிர் சூழலை தொடர்ந்து நாம் அவதானித்தும் பதிவும் செய்து வருகிறோம். மரங்கள், ஊர்வனங்கள், பாலூட்டிகள் மற்றும் பறவைகள் என அனைத்தும் நம்மால் பதிவுசெய்ய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 08.01.2023 அன்று தன்னார்வலர்களின் பங்கேற்புடன் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

நிகழ்வில் பறவைகளின் பங்கு, எழில்வனத்தின் பறவைகள், தன்னார்வல பணிகள் எப்படி உயிர் சூழலை மேம்படுத்துகிறது என்பவை பற்றிய சிறு உரையாடல் நடந்தது.

பிறகு பறவைகள் கணக்கெடுக்கும் நடை சுமார் 7.15 மணியளவில் துவங்கியது. பொதுவான பறவைகளான தவிட்டுக் குருவி (Yellow Billed Barbbler), செம்புழை சின்னான்(Red Vented Bulbul), கரிச்சான் (Black Drango) ஆகியவை உடனடியாக கண்களில் தென்பட்டு கணக்கில் ஏறின. தவிட்டு குருவியை பலமுறை பார்த்திருந்தாலும் அதன் பெயரை இன்று சிலர் அறிந்துகொண்டனர். கண்ணில் பார்க்க முடியவில்லை என்றாலும் பறவைகளின் ஒளி கொண்டு கணக்கில் கொள்வது வழக்கம். அதன்படி நடை ஆரம்பிக்கையிலேயே அக்கா குயில்(Large Hawk Cuckoo), வெண்புருவ சின்னான்(White Browed Bulbul), கதிர் குருவி (Prinia) ஆகியவையின் ஓசைகள் கேட்டன. அவையும் கணக்கில் ஏற்றபப்ட்டது. (இம்மூன்று பறவைகளையும் நிகழ்வு முடியும் முன் பார்த்துவிட்டோம்)

வழக்கமாக மனிதர்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கையில் பறவைகள் சற்று ஒதுங்கியே இருக்கும். அதானால் சற்றே அறிய வகை பறவைகளை பார்ப்பதற்கான எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டே வந்திருந்தோம்.

ஆனால் அதற்கு மாறாக நடை ஆரம்பித்த 5~10 நிமிடங்களிலேயே ஒரு (சற்றே) அறிய வகை பறவையை பார்க்க முடிந்தது. எழில்வனத்தின் பெரிய ஆலமரத்தில் எங்களை பார்த்து உள்ளே ஒதுங்கிய பறவையை குயிலா என்ற சந்தேகத்துடன் அனுகையில் அது நீலமுக பூங்குயில் (Blue Faced Malkoha)என்பது உறுதியாயிற்று. ஏற்கனவே எழில்வனத்தில் பதிவுசெய்யப்பட்டு இருந்தாலும் அடிக்கடி பார்க்க முடியாத அழகான பறவை. எழில்வனத்தில் கூடு கட்டி வாழும் பறவை..

(நீலமுக பூங்குயில் - வேறு இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்)

பிறகு அடுத்தடுத்தது சிகப்பு மூக்கு ஆள்காட்டி(Red wattled lapwing), கதிர் குருவி, இந்தியாவின் மிகச்சிறிய பறவையான பூங்கொத்தி (Pale Billed Folwerpecker) , புதர் வானம்பாடி (Jerdon Bush lark), பஞ்சுருட்டான்கள் (Green Bee eaters) என பல பறவைகளை பார்க்க முடிந்தது. மடையான்கள்(India Pond Heron), தவிட்டு குருவி, தேன்சிட்டுகள் (Sunbird) போன்ற பறவைகளை அதிக எண்ணிக்கையில் பார்க்க முடிந்தது. கண்டங்கள் தாண்டி வந்து நம் புதர்களில் மறைந்திருக்கும் நாணல் கதிர் குருவி(Blyth reed warbler), நீல வால் பஞ்சுருட்டான் (Blue tailed Bee eater) ஆகியவை இன்று நாம் பார்த்த வலசை பறவைகளாகும். (இவை தொலைதூர குளிர் பிரதேசங்களில் இருந்து நம் நிலத்தின் இதமான வெப்பநிலைக்காக வருபவை). இவையெல்லாம் பார்த்தவாறு கிட்ட தட்ட நடையின் இறுதிக்கு வந்திருந்தோம்..

புதிய பறவை ஒன்றையாவது இன்று பதிவு செய்வோம் என்ற நம்பிக்கையில் ஆரம்பித்த நடையில் இதுவரை புது பறவைகள் ஏதும் பதிவுசெய்யப்படவில்லை. (கடந்த வருடம் இதே நிகழ்வில் large cuckooshrike என்ற அறிய பறவை பதிவு செய்யப்பட்டு இருந்தது) நடையின் இறுதி பகுதியில் இரு ஜோடி தேன்சிட்டுகள் மரம் ஒன்றில் வந்து அமர்ந்தன. வழக்கமான ஊதாதேன்சிட்டாக இருக்கும் எண்ணுகையில் அதன் ஓசைகள் சற்றே வேறுபட, தொலைநோக்கி கொண்டு பார்த்தோம். அது நீளமான அலகு கொண்ட Loten's தேன்சிட்டாக இருக்குமோ சந்தேகம் வர தேவையான புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். பிறகு அது Loten's தேன்சிட்டு தான் என உறுதிப்படுத்தப்பட்டது. இவாறாக எழில்வனத்தின் 57 வது பறவை பதிவு செய்யப்பட்டது. புதிய பறவை ஒன்றையாவது இன்று பதிவு செய்வோம் என்ற நம்பிக்கையும் உண்மையானது. பிறகு அனைவரும் ரசிக்கும் வண்ணம் அழகான மாங்குயில் (Indian Golden Oriole) ஒன்று தரிசனம் தந்தது. எழில்வனத்தில் வழக்கமாக பார்க்கக்கூடிய கெளவுதாரிகளை ஏன் இன்று பார்க்க முடியவில்லை என்ற சிந்தனையுடன் நிகழ்வை முடிக்கும் தருவாயில் "நான் இங்கு தான் இருக்கிறேன்" என்று ஓசை எழுப்பி நிகழ்வின் கடைசி பறவையாக தன்னை இணைத்துக்கொண்டது. மொத்தமாக 32 வகை பறவைகளையும் மொத்த எண்ணிக்கையில் 129 பறவைகளையும் பதிவு செய்திருந்தோம்.

எழில்வனத்தில் Loten's தேன்சிட்டுகள்

நிகழ்வின் சில துளிகள்:

1. மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். பலருக்கும் பறவைகள் பற்றிய ஒரு அடிப்படை விழிப்புணர்வை இந்நிகழ்வு தந்திருக்கும் என்று நம்புவோம்.

2. தமிழ் நாட்டின் சமவெளியில் மூன்று வகையான தேன்சிட்டுகள் உள்ளன. அவை மூன்றையும் இன்று பதிவு செய்ய முடிந்தது.

3. எழில்வனத்தின் முக்கிய பறவையான ரப்பாக்கியை (Indian Nightjar) இன்று பதிவு செய்ய முடியவில்லை.

4. ஒப்பீட்டளவில் Urban Birds என்றழைக்கப்படும் புறா, காகம் போன்ற பறவைகள் குறைவாகவே பதிவுசெய்யப்பட்டன. இது எழில்வனம் இன்னும் இயற்கை சூழல் மாறாமல் இருப்பதற்கு ஒரு சான்று.

5. நிகழ்வில் பறவைகளின் தமிழ் பெயர்களே பயன்படுத்தப்பட்டது. இது மாணவர்கள் மனதில் எளிதில் பதிய ஏதுவாக இருக்கும். (தமிழ் தெரியாத ஒரு தன்னார்வலருக்கு மட்டும் விஜய் மொழிபெயர்த்து கூறினார்)

(அரண் அமைப்பானது சூழல் முன்னெடுப்புகள், பழங்குடிகள் கல்வி மற்றும் இதர நலன்கள், போக்குவரத்து என பல்வேறு தளங்களில் திருப்பெரும்பதூர் பகுதியில் இயங்கி வருகிறது. ஆர்வம் உள்ளோர் தொடர்பு கொள்ளலாம்)