வணக்கம் தோழர்களே,
இருபது வருடங்களுக்கு முன்பு குழந்தைகளாக இருந்தவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். இனிமையான தமிழிலே வளமான தரத்திலே கோகுலம், பூந்தளிர், சிறுவர்மலர் போன்ற பல தமிழ் சிறுவர் பத்திரிக்கைகளை படிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்திருக்கிறது. அந்த இனிமையான யுகத்தின் இறுதி காலகட்டங்ளில் படிக்கும் பழக்கத்தை ஆரம்பித்திருந்த நானும் அதிர்ஷ்ட்டசாலி தான். தற்போதய குழந்தைகள் 'பவர் ரேஞ்சர்' தொடர் மற்றும் பல வீடியோ கேம்களுக்கு அடிமையாகி கிடக்கிறார்கள். அந்த இனிமையான கலகட்டங்களில் பல சித்திரகதைகளை கொடுத்திட்ட ஆனந்தி - வினு கூட்டணியின் படைப்புகளை பற்றியே இந்த பதிவு.
என்னிடம் இருக்கும் 1985 ~ 1990 இடைப்பட்ட காலங்களில் வந்த பல
கோகுலம் புத்தகங்களின் நடுபக்கங்களை அலங்கரிப்பது ஆனந்தி - வினு கூட்டணியின் படைப்புகளே. 1986ல் அழ.வள்ளியப்பா அவர்கள் ஆசிரியராக இருந்தார். இந்த கூட்டணி எப்போது ஆரம்பித்தது, எவ்வளவு சித்திர கதைகளை படைத்திருகிறார்கள் போன்ற விபரங்கள் என்னிடம் துல்லியமாக இல்லை. கிட்டதட்ட 100 கதைகளுக்கு மேல் படைத்து இருப்பார்கள் என் எண்ணுகிறேன்.
நான் படித்திட்ட அனைத்து கதைகளும் சரியாக 16 பக்கங்கள் கொண்டவையே. சில பக்கங்கள் முழு வண்ணத்திலும் சில பக்கங்கள் இரட்டை வண்ணத்திலும் இருக்கும். பெரும்பாலும் புராண மற்றும் சரித்திர கதைகளையே உருவாக்கிருகிறார்கள். சரித்திர கதைகளை நிறைய எழுதியதற்கு ஆனந்தி அவர்கள் தமிழின் முதன்மையான சரித்திர கதை எழுத்தாளர் ஒருவரின் புதல்வியாக இருப்பது கூட காரணமாக இருக்கலாம். ஆம் நண்பர்களே ஆனந்தி அவர்கள் பொன்னியின் செல்வன் படைத்த எழுத்தாளர் கல்கியின் புதல்வியாகும். (அவர் தனது தந்தை பற்றி கொடுத்த பேட்டியை படிக்க
இங்கே கிளிக்கவும்)
ஆனந்தி அவர்கள்
சரித்திர கதைகளை 16 பக்கங்களில் அடக்கி அனைவருக்கும் புரியும் படியாகவும் சுவையாகவும் கொடுப்பது என்பது அவ்வளவு எளிய காரியம் அன்று. அதனை திறம்பட செய்திருகிறது இந்த கூட்டணி. அதற்கு ஓவியர் வினுவின் பங்களிப்பும் முக்கியமானது. வினு அவர்களின் ஓவிய தரம் பற்றி யாரும் சொல்ல தேவையில்லை. கல்கி போன்றவர்கள் வர்ணணையில் கொண்டுவரும் அழகினை அப்படியே ஓவியத்தில் பதித்து விடுவார். ஆக இப்படி ஒரு தரமான எழுத்தாளர் மற்றும் ஒரு ஓவியர் சேர்ந்து அழகான சித்திரகதைகளை படைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அனைத்து கதைகளும் சிறுவர்களுக்கு உபயோகமான சரித்திர தகவல்களையும் தேவையான் அறிவுரைகளையும் கொடுக்கும் கதைகள்.
இங்கு கோகுலத்தி வெளிவந்த சில சித்திரகதைகளின் பக்கங்களை பார்க்கலாம்.
தயமந்தி சுயவரம்
ஆனந்தி - வினு அவர்களின் கூட்டணியின் படைப்புகள் பூந்தளிரின் இறுதி காலகட்ட இதழ்களில் வெளிவந்தன. இவை வெளிவரும் போது பூந்தளிர் ஆசிரியராக இருந்தவர் நமது வாண்டுமாமா.
மந்திர பொம்மை
சிந்துபாத்
மந்திர அம்புகள்
பதிவை படித்துவிட்டு கருத்துகளை கூறுங்களேன்....