Friday, February 18, 2011

சிதம்பர ரகசியம் - நகைச்சுவை சித்திரக்கதை

தமிழ் காமிக்ஸ் உலகில் கல்கி இதழில் வெளிவந்த தொடர் சித்திரக்கதைகள் மிகவும் முக்கியமான இடத்தை பெறுகின்றன. வாண்டுமாமா, செல்லம், ரமணி, வினு போன்ற ஒப்பற்ற கலைஞர்களின் திறமைகளுக்கு கல்கி இதழ் ஒரு சிறந்த வடிகாலாக விளங்கியது என்றால் அது மிகை அல்ல. இதில் வாண்டுமாமாவின் பல கதைகள் பார்வதி சித்திரக்கதைகள் இதழ் மூலம் மறுபதிப்பு செய்யப்பட்டு பெரும் வெற்றி பெற்றதை நாம் அறிவோம். இதோ இங்கு நாம் பார்க்கும் சித்திரக்கதை தொடர் ஒரு வித்தியாசமான கதை மற்றும் சித்திர அமைப்பு உடைய ஒரு  சித்திரக்கதையாகும்.


தமிழில் படைக்கப்பட்ட சித்திரக்கதைகளில் நகைச்சுவை கதைகளின் பங்கு சற்று குறைவு போல எனக்கு ஒரு தோற்றம் தெரிகிறது. அதிலும் வெளிவந்த நகைச்சுவை கதைகளின் சித்திரங்கள் சாதாரண சித்திரங்களிலேயே இருக்கும். (உ-ம் பலே பாலு, நந்து சிந்து மந்து). லக்கிலூக், சிக்பில் போன்று கார்டூன் வகை சித்திரங்களுடன் தமிழ் காமிக்ஸை பார்ப்பது மிகவும் அறிது. இன்றை தினத்தந்தி - தங்க மலர், சிறுவர் மணி போன்ற இதழ்களில் கார்டூன் வகை சித்திரங்களை அவ்வப்போது பார்க்க முடிகிறது. ஆனால் இக்கதைகள் யாவும் சிறிய வயது குழ்ந்தைகளுக்கானதே. தரமும் குறைவு.

சிதம்பர ரகசியம்:

இந்த பதிவில் நாம் பார்க்கும் சித்திரக்கதை 1970 ல் துவங்கி கல்கியில் தொடர்கதையாக வெளிவந்த ஒன்று. கோமதி சுவாமிநாதன் என்பவரின் கதைக்கு ஓவியர் ராமு சித்திரங்கள் வரைந்திருக்கிறார். கோமதி சுவாமிநாதனை பற்றி googling செய்த போது இவர் ஒரு நகைச்சுவை எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியர் என்பது தெரிகிறது.
 

சிதம்பர ரகசியத்தின் கதை இது தான். சிதம்பரம் பர்மாவில் இருந்து திரும்பவிருக்கும் ஒரு பெரிய பணக்காரர். அவரின் சொத்துக்கு நேரடி வாரிசு யாரும் இல்லை. தனது உறவினர்கள் யாரையும் பார்த்திராத இவர் எப்படியோ தனது உறவினர்களை கண்டறிந்து தந்து மாளிகைக்கு வர அழைக்கிறார். சிதம்பரம் ஊரில் இல்லாத போது அவரின் சொந்தக்காரர்கள் அவரின் வீட்டுக்கு வருகிறார்கள். அங்கு மாளிகையின் விசுவாசமான வேலைகாரனும் புதிதாக சேர்ந்த சமையல்காரனும் இருக்கிறார்கள். எவ்வித சந்தேகமும் இல்லாமல் உறவினர்களிடையே சொத்துக்காக போட்டி நிலவுகிறது. ஆக இந்த ஆறு ஏழு கதாபாத்திரங்கள் மாளிகையில் அடிக்கும் கூத்துகளே கதை. கடைசி சில பக்கங்களில் சிதம்பரம் வருகிறார். அவர் யாருக்கு சொத்துகளை கொடுத்தார் என்பது முடிவு. ஒரு முழுநீள நகைச்சுவைக கதைக்கான அனைத்து அம்சங்களுடன் கதை விளங்குகிறது.


கதையின் முதல் சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு......




கதை முழுவது விழுந்து விழுந்து சிரிக்கவில்லை எனினும் பல இடங்களில் புன்னகையையும் சில இட்ங்களில் சிரிப்பையும் கொடுக்கிறது இந்த கதை. சித்திரங்களின் தரம் அருமை. ராமுவின் கைவண்ணம் பற்றி ஏற்கனவே தமிழ்வாணன் கதைகளுக்கு வரைந்திட்ட ஓவியங்கள் மூலம் ஒரு சிறப்பான அபிப்பிராயம் இருந்தது. இந்த சித்திரக்கதையை படித்த பின் அந்த அபிப்பிராயம் இன்னும் கூடுகிறது. அவரின் திறமையை தமிழ் பத்திரிக்கைகள் சரியாக பயன்படுத்தி கொண்டார்களா என கூட சந்தேகம் வருகிறது.


கோமதி சுவாமிநாதன
(புகைப்படம் உபயம் - அப்புசாமி இணையதளம்)
அந்தகால பேச்சுவழக்கு, சினிமா மோகம், நாடக மோகம், உடைகள், ஏழை பணக்காரர்கள் உறவு, வாகனங்கள், அரசியல் கமெண்டுகள் என நமது அப்பா, தாத்தாக்கள் காலத்திற்கு ஒரு பயணம் சென்றுவிட்டு வந்த அனுபவத்தை கொடுக்கிறது இந்த கதை. நான் படித்தது தொடர்கதை பைண்டிங் இதழ் என்பதால் அந்த கால விளம்பரங்களையும் மற்றும் சில கட்டுரைகளையும் போனஸாக படிக்க முடிந்தது. இந்த தொடர்கதை கல்கியின் அட்டைபடத்திலும் இடம்பெற்று இருக்கிறது. இது அந்த கால கல்கி நிறுவனம் சித்திரக்கதைகளுக்கு கொடுத்து வந்த முக்கியத்துவத்தை தெரிவிக்கிறது. கோமதி சுவாமிநாதன் - ராமு கூட்டணியில் எத்தனை சித்திரக்கதைகள் வந்துள்ளன எந்த்தெரியவில்லை என்றாலும் தமிழில் ஒரு சிறந்த சித்திரக்கதையை கொடுத்த பெருமையை பெறுகிறது இந்த கூட்டணி.
பதிவை படித்த நண்பர்களே, தவறாமல் உங்கள் கருத்துகளையும் தெரிவியுங்கள்.

குறிப்பு : மங்க்கி காமிக்ஸ் பற்றிய பதிவு கூடுதல் ஸ்கேன்களுடன் update செய்யப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு

(எவ்வித லாப நோக்கமும் இன்றி சித்திரக்கதையின் சில பக்கங்கள் இங்கே வழங்கப்பட்டு இருக்கின்றன. உர்மையாளர் ஆட்சேபித்தால் இவை நீக்கப்படும்)

Tuesday, February 15, 2011

XIII - இரத்தப்படலம் அனுபவங்கள்


(பல நாட்களுக்கு முன்பு தயாரித்த பதிவு. சிறிய தாமத்துடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது)
கடந்த இரண்டு மூன்று நாட்களாக எங்கள் வீட்டில் டீ.வி ஓடவில்லை, கணிப்பொறி இயங்கவில்லை.... அந்த அளவு இரத்தப்படலம் என்னை ஆக்கிரமித்து இருந்தது. ஒரு வழியாக படித்து முடித்து விட்டேன். இங்கு எனக்கும் இரத்தப்படலத்திற்கும் இருக்கும் 'பூர்வ ஜென்ம' பந்தத்தை இங்கு நினைவுகூர்கிறேன


XIII எனக்கு முதன்முதலில் அறிமுகம் ஆகியது பாகம் - 5 லில். அந்நாளில் ஒன்னுமே புரியாத மொக்கை கதையாக பட்ட அந்த புத்தகத்தை கொடுத்து வேறு ஒரு 'நல்ல' காமிக்ஸ் புத்தகம் வாங்கி கொண்டேன். (அநேகமாக ராணி காமிக்ஸ் மாயாவி சாகஸம் என் எண்ணுகிறேன்). போக போக பாகம் 6, 7 படிக்கும் போதும், அவ்வப்போது லயன் ஆசிரியர் மற்றும் வாசகர்கள் இரத்தப்படலம் பற்றி உயர்வாக பேசும் போதும் இரத்தபடலம் முழுவது படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தலை தூக்க ஆரம்பித்தது. ஆகையால் முந்தய பாகங்களை சேகரிக்க ஆரம்பித்தேன். 1,2,5,6,7,8,9,10 வரை சேகரித்து விட்டாகி விட்டது. (1, 2 - ஐஸ்பெர்க் காமிக்ஸ் உபயம்). ஆனாலும் 1,2 மற்றும் 5, 6 பாகங்கள் மட்டுமே படித்திருந்தேன். பழைய பாகங்கள் அனைத்தும் கிடைத்த பின் மொத்தமாக படித்து கொள்ளலாம் என்று இரத்தப்படலம் படிப்பதையே நிறுத்தி விட்டேன்.
இந்நிலையில் விஜயன் அவர்களின் 1-18 பாகங்களை ஒரே புத்தகத்தில் வெளியிடும் திட்டத்தை கேட்டதும் மகிழ்ச்சி. ஆனால் இதழ் வெளிவருவதில் இருந்த தாமதம் அந்த மகிழ்ச்சியை சிறிது சிறிதாக கரைத்து கொண்டிருந்தது. கடைசியாக அனைத்து பாகங்களையும் ஒரு சேர ஒரே புத்தகத்தில் பார்த்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆக இத்தனை வருடங்களாக காத்திருந்து படித்தது அருமையான அனுபவம்.

இந்த கதையில் என்னை கவர்ந்த ஒரு சில கட்டங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன். இவை அனைத்தும் கதையின் முக்கிய திருப்பங்களோ அல்லது ஆழமான உண்ர்ச்சி குவியல்களோ அல்ல. ஜஸ்ட் போகிற போக்கில் ரசிகனை கவர்ந்திடும் கட்டங்கள். இது போன்று எண்ணற்ற சம்பவங்கள் கதையினில் வருகிறன. ஆனால் random ஆக ஒரு சில கட்டங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு தலை ராகம்:
தனது காரியம் நிறைவேறுவதற்காக காதலியாக நடித்து இந்த டாக்டரை ஏமாற்றுகிறாள் நம் அனைவர் மனம் கவர்ந்த ஜோன்ஸ். அம்மணி ஏமாற்று பேர்வழி என தெரிந்தும் இந்த டாக்டரின் தீவிர காதல் நமக்கு ஆச்சிரியம் கொடுக்கிறது. இந்த காதல் விளையாட்டில் டாக்டரின் உயிரும் போவது கொடுமை. ஐய்யோ பாவம் டாக்டர். என்னதான் ஜோன்ஸ் காதலை பயன்படுத்தி ஏமாற்றி இருந்தாலும் நமக்கு அவர் மேல் கோபம் வரவில்லை. அது தான் அந்த பாத்திரப்படைப்பின் வெற்றி.



ஜோன்ஸின் தியாகம்
மங்கூஸ் ஆட்களுடன் XIII க்காக சண்டையிடும் போது ஏற்படும் காயத்தினால் தனது தாய்மையை இழக்கிறார் ஜோன்ஸ். ஆனால் அந்த விஷயத்தை கேள்விபட்ட உடன் அழுது கூக்குரல் போடாமல் கூலாக இருப்பது தாலி செண்டிமெண்ட், அம்மா செண்டிமெண்ட் பார்த்து பழகிய நமக்கு புதுசு.


ஜோன்ஸின் சக்களத்தி சண்டைகள்
அது என்னமோ தெரியவில்லை நம்ம XIII ஐ பார்த்தவுடன் பெண்கள் மயங்கிவிடுகிறார்கள்.... அடிக்கடி இது போல நடந்திடும் சம்பவங்கள் ஜோன்ஸை கோபப்படுத்திறது. அதை அதிகமாக வெளிகாட்டாமல் XIII ஐ ஜோன்ஸ் கலாய்த்திடும் கட்டங்கள் சுவாரிஸ்யமானவை. இந்த காட்சிகளை ரசிக்க செய்ததில் மொழிபெயர்ப்பிற்கும் சிறந்த பங்கு உண்டு. இதோ சாம்பிளுக்கு ஒன்று


காதலர்களின் ஊடல்
ஜோன்ஸுக்கும் XIIIக்கும் அவ்வப்போது வந்திடும் ஊடல்கள் இனிமையானவை. இதோ அவற்றில் ஒன்று.



மங்கூஸ் - நீ ரொம்ம்ப நல்லவண்டா
பிரஸிடெண்ட் வாலியின் வண்டவாளங்கள் கொலைவெறி புகழ் மங்கூஸ் மூலம் உலகிற்கு தெரிவது எதிர்பாரா திருப்பம். தமிழ் சினிமாவில் கூட இது போன்ற 'எதிர்பாரா' திருப்பங்கள் வருவதுண்டு. இரினாவின் மங்கூஸ் பற்றிய கமெண்ட்டை பாருங்களேன். (மூன்றாவது படம்)




ஆண்டியை மடக்கப்பார்க்கும் பொடியன் - No comments..


புஸ்ஸுனு போன புதையல்:
நாம் படிக்கு தமிழ் காமிக்ஸ்களில் என்றுமே ஆரம்பத்தில் செம பில்டப்புடன் தொடங்கும் புதையல் மேட்டர்கள் சப்பென்று முடிந்துவிடுவது வழக்கம். இங்கு அதே கதை தான். (எந்த காமிக்ஸ் ஹீரோவாவது முழு புதையலையும் கைபற்றி சந்தோஷமாக இருந்து நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா??)


இமாலய சாதனை என்றாலும் குறைகள் இல்லாமல் இல்லை. எனக்கு பட்ட சில சிறிய குறைகள்

1. இதழின் சில இடங்களில் குறிப்பாக கதையில் மழை பெய்யும் இடங்களில் மிகவும் மோசமாக இருக்கிறது அச்சுத் தரம். ஒன்றுமே படிக்க முடியவில்லை (உ-ம் பக்கங்கள் 148 ~ 151, 509 ~ 514)

2. இந்த இதழில் படைப்பாளிகள் பற்றி விரிவாகவே கூறி உள்ளார் விஜயன் சார். நன்றி. அதே சமயம் இந்த இமாலய சாதனை படைக்க உதவிய மொழிபெயர்ப்பாளர்கள், அச்சு கோப்பாளர்கள் மற்றும் தொழிநுட்ப வல்லுனர்களின் பெயரையும் ஆசிரியர் வெளியிட வேண்டும் என்பது என் எண்ணம்.

கடைசியாக,
இதுவரை இல்லாத காமிக்ஸ் அனுபவத்தை வழங்கிய (அதுவும் இவ்வளவு குறைந்த விலையில்) விஜயன் சாருக்கும் அவரின் டீம் க்கும் என் நன்றிகள். சற்று பிராக்டிகலாக பார்க்கையில் எதிர்காலத்தில் இது போன்ற அனுபவம் தமிழில் கிடைக்க வாய்ப்பு மிக மிக அறிது எனவே தோன்றுகிறது. அதுவே இந்த இதழின் வெற்றி.
 
குறிப்பு 1 - இவ்விதழ் பற்றி குமுதம், குங்குமம் இதழிகளில்  குறிப்பிட்டு உள்ளார்கள். மிகவும் மகிழ்ச்சியான செய்தி. (பார்க்க - விஸ்வாவின் பதிவுகள்)
 
குறிப்பு 2 - கேப்டன் டைகரின் 'இரும்பு கை எத்தன்' ஞாபகம் இருக்கிறதா?? பாதியில் தொங்கி கொண்டிருக்கும் அந்த கதையும் இதே போல் ஒரே ஷாட்டில் வெளியிட்டால் நன்றாக இருக்கும்...