Friday, December 15, 2023

திருப்பெரும்புதூர் பறவைகள் (Birds of Sriperumputhur)

பறவைகள் பார்த்தல் : 

சில காலங்கள் வரை அரிதாக ஒரு சிலரின் பொழுதுபோக்காக அறியப்பட்ட பறவை நோக்கல் இன்று அனைத்து தரப்பு மக்களும் பங்குகொள்ளும் ஒரு நிகழ்வாகவும் சூழியல் ஆர்வலர்கள் நாட்டம் கொள்ளும் ஒரு நிகழ்வாகும் மாறி உள்ளது. நம்மை சுற்றி உள்ள இயற்கையின் அங்கங்களை புரிந்து கொள்ள பறவை நோக்கல் ஒரு சிறந்த வழியாக உள்ளது. 

திருப்பெரும்புதூரும் பறவைகளும் :

புகழ்பெற்ற பறவைகள் சரணாலயங்ககள் எதுவும் திருப்பெரும்புதூர்  சுற்றி இல்லை. ஆனாலும் பல உள்ளூர் நீர்நிலைகள் மற்றும் இங்குள்ள நிலப்பரப்பு  பறவைகளின் புகலிடமாக திகழ்கின்றன. திருப்பெரும்புதூர் அருகில் உள்ள நீர்நிலைகளும் அவற்றில்  பதிவான பறவை வகைகளின் எண்ணிக்கையும் கீழே.(தகவல் மூலம் - மக்கள் அறிவியல் தளமான ebird.org

செம்பரம்பாக்கம் ஏரி - 184

தென்னேரி - 172

நயப்பாக்கம் (வளர்புரம்) - 190

நாவலூர் - 134

திருப்பெரும்புதூர் ஏரி - 87

இந்த எண்ணிக்கை  ஒரு உத்தேசமாக ஒன்றாகும். முறையான கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டால் இன்னும் துல்லியமான எண்ணிக்கையை அறியலாம். 

பறவை பார்தலில் ஒவ்வொரு ஊருக்கு என்று சில சிறப்பு பறவைகள் இருக்கும். அவை மற்ற பகுதிகளில் காணப்பட்டாலும் அந்த பகுதியில் அதிகம் / எளிதாக பார்க்கக்கூடியதாகவோ, அல்லது எனக்கு குறிப்பிட்ட  நினைவுகளுடன் தொடர்புடையதாகவோ இருக்கும்  பறவைகள் சிலவற்றை இங்கு பார்ப்போம். 

மூவண்ண சில்லைகள் (Try colored Munia) :

திருப்பெரும்புதூர் பகுதியில் பல இடங்களில் பரந்த இடுப்பளவு வளரும்  புல்வெளிகளை பார்க்கலாம் (பெரும்பாலும் நீர் நிலைகள் அருகில்). மரங்களும் இதர செடிகளும் குறைவாக இருக்கும் இப்பகுதிகளில் இந்த அழகான சில்லைகளை பார்க்கலாம். திருப்பெரும்புதூர் ஏரி புறம்போக்கு பகுதிகளில் அரண் நண்பர்கள் கணக்கெடுக்கும் போது  நூற்றுக்கணக்கான  மூவண்ண சில்லை பறவைகளை ஒன்றாக பார்த்தது ஒரு சிறப்பான அனுபவம். இவை இடுப்பு உயர புற்கள் மற்றும் புதர்களில் கூடு கட்டி வாழும்.

இதே குடும்பத்தை சேர்ந்த புள்ளி சில்லைகளை(Scaly Breasted Munia) நம் வீடு அருகில் கூட பார்க்கலாம். இடுப்பு உயர புற்  பரப்புகளில் அரிதாக சிவப்புச்சில்லையும் (வலசை வரும் பறவை) பார்க்கலாம். தண்டலம் ஏரியின் அருகில் இந்த அழகான - துடிப்பான சிவப்பு சில்லைகளை(Red avadavat) வெகு அருகில் பார்தது பசுமையாக நினைவில் உள்ளது. 



 கருப்பு வெள்ளை மைனா (Pied Starling) :

வட மாநிலங்களில் பார்க்கக்கூடிய இந்த மைனா வகை பறவையை தமிழ்நாட்டில் அரிதாக  ஒரு சில இடங்களில் மட்டுமே பார்க்க முடியும். அந்த ஒரு சில இடங்களில் ஒன்றாக திருப்பெரும்புதூர் உள்ளது. திருப்பெரும்புதூர் ஏரிவளர்புரம் பகுதிகளில் பார்க்கலாம். பெரும் எண்ணிக்கையில் வலசை வரும் சூரைக்குருவிகளுடன்(Rosy Starling) சேர்ந்து சில சமயம் உலா வரும்.


Pic - eBird

இலை கோழிகள் (Jacanas) :

 தாமரை இலை கோழிகளில் இரண்டு வகைகள் நம் பகுதியில் உள்ளன. நீள வால் இலை கோழி(Pheasant Tailed Jacana)கரும் பச்சை இலை கோழிகள்(Bornz winged Jacana). இவை நம் பகுதியின் அனைத்து நீர் நிலைகளும் ஓரளவு  சாதாரணமாக பார்க்கலாம். நம் பகுதியில் சிறிய குளங்களிலும் கூட பார்க்க முடியும்.இப்பறவைகள் கால்கள்  இலைகளின் மேல் நடக்கும் வண்ணம் இருப்பது சிறப்பு. இப்பறவைகளுடன் தாழைக்கோழிகளையும் (Grey headed Swamphen)நாமக்கோழிகளையும்-Common coot (சற்று பெரிய நீர் நிலையாக இருக்கும் பட்சத்தில்) பார்க்கலாம்.  அழகான இப்பறவைகள் எளிதில் காணக்கூடியதாகவும் இருப்பதால் புதிதாக பறவை நோக்கலுள்க்கு வருபவர்கள்சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்த பொருத்தமான பறவைகள் இவை.




சீழ்க்கைச் சிறகிகள் (Whistling  Ducks) : 

வாத்துகளின் இருப்பும் வரவும் ஒரு நீர்நிலை சிறந்த உயிர் சூழலுடன் இருக்கிறது என்று பொருள். (வளர்ப்பு வாத்துகள் அல்ல. காட்டு வாத்துகள்) நம் பகுதிகளில் 8 10 வகையான வாத்துகளை பார்க்கலாம். அதில் மிக அதிக அளவில் காணக்கூடிய வாத்தினமாக இந்த சீழ்க்கைச் சிறகிகள் உள்ளன. இவை கத்தும் பொது விசில் அடிப்பது போல்  இருப்பதால் இந்த பெயர். ஒரே சமயத்தில் 100 க்கு மேற்பட்ட எண்ணிக்கையில் பார்க்கலாம். கூட்டமாக நீரில் இருந்து எழுவதும்பறப்பதும் மீண்டும் நீரில் அமர்வதும் காண்பதற்கு கண்கொள்ளா காட்சிகள். இந்த காட்சிகளை பார்க்க எங்கெங்கோ செல்ல தேவையில்லை.  நாம் நம் அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு சென்றால் போதும் என்பது கூடுதல் சிறப்பு. உள்ளூர் பறவைகளான இவற்றுடன்இதே போல தெரியும் பெரிய சீழ்க்கைச் சிறகிகள் கலந்து இருக்கும். பெரிய சீழ்க்கைச் சிறகிகள் வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் இனமாகும். ஒரே சமயத்தில் 300 க்கு மேற்பட்ட பறவைகளை இருங்காட்டுகோட்டையில் ஏரியில் பார்ததுள்ளேன். 



இரைக்கொல்லி பறவைகள்:

ஒரு காட்டின் உயிர் பன்மை வளம் (Bio-diversity) அந்த காட்டின் உயிர் கொல்லி விலங்குகளான புலிகள், சிறுத்தைகளின் எண்ணிக்கை கொண்டு அளவிடுவது வழக்கம். அதேபோல ஒரு பகுதியின் உயிர் பன்மை வளம் அப்பகுதியின் இரைக்கொல்லி பறவைகளின் எண்ணிக்கை கொண்டு அளவிடலாம்.   திருப்பெரும்புதூர் பகுதியில் சாதாரணமாக பார்க்கக்கூடிய இறை கொல்லி பறவைகளாக வல்லூறு, கருந்தோள் பருந்து உள்ளன. அதே சமயம்,  திருப்பெரும்புதூர் அருகில் உள்ள தென்னேரியும், நயப்பாக்கம் ஏரியும் பல்வேறு வகையான இரைகொல்லி பறவைகள் பார்க்கும் இடங்களாக உள்ளன. பாம்புண்ணி கழுகுகள், விராலடிப்பான், தேன் பருந்து ஆகியவை அவற்றில் சில. இவ்விடங்கள் பறவைகள் ஆர்வலர்களின் மத்தியில் பிரபலமான இடங்களாகும்.




பொதுவாக...

திருப்பெரும்புதூர் பகுதியில் உள்ள அனைத்து பறவைகளையும் இக்கட்டுரையில் அடக்கிட முடியாது. நம் பகுதியின் சிறப்பு பறவைகள் என கருதக்கூடிய பறவைகளை மட்டும் இங்கு பார்த்துளோம்.

பொதுவாகவே பறவைகள் பார்ப்பதில் பொறுமை மிக அவசியம். அதிக அளவில் உள்ள பறவைகளை கூட சில முறை நம்மால் பார்க்க முடியாமல் போகலாம். (இதுவே பறவைகள் பார்த்ததில் உள்ள சுவாரிஸ்யமும் ஆகும்). அதிலும் இரைக்கொல்லி பறவைகளை பார்க்க கூடுதல் பொறுமையும், அதிஷ்டமும் வேண்டும். மேலும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அங்கிருக்கும் பறவைகளை பார்த்தல் தான் பறவைகள் பார்த்தல் என்று கொள்ள தேவையில்லை. நம் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் அருகிலும் பல்வேறு வகையான பறவைகளை பார்க்கலாம். நம் வீடுகளுக்கு அருகில் தென்படும் பறவைகளை நோக்கும் போது நம் அருகில் இவ்வளவு பறவைகள் உள்ளனவா என்று பலரும் ஆசிரியப்படுவர்.

மேலும் அவற்றின் நடத்தைகளை காண்பதும் ஒரு சுவாரிஸ்யமான விஷயமாக இருக்கும். பெயர் தெரியாத பறவைகளின் அடையாளங்களை குறிப்பெடுத்து இணையம் மற்றும் பறவை கையேடுகளில் தேடி அவற்றின் பெயர்களை அறியலாம். மேலும்  இவற்றை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது மிக அவசியம் ஆகும். நம் நாட்டிலேயே இல்லாத Toucan, Hummingbird போன்ற பறவைகளின் பெயரை ஆங்கில பாட நூல் மூலமாக அறிந்திருக்கும் நம் குழந்தைகள் நம் வீட்டிற்க்கு வரும் காக்கை, புறா, கிளிகள் தவிர இதர பறவைகளின் பெயரை அறியாமல் இருப்பது வருத்தமே.

 திருப்பெரும்புதூர் பறவைகளுக்கான சவால்கள் :

எல்லா இடங்கள் போலவே நம் பகுதிகளும் பறவைகளின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருகிறது. அதற்கு காரணம் சினிமாக்களில் காட்டுவது போல செல்போன் டவர்கள் அல்ல. வாழிடங்கள் அழிப்பே முதன்மை காரணம் ஆகும். பறவைகள் கூடு கட்டி உணவு தேடி வாழும் இடங்களை அவற்றின் வாழிடங்கள் என்கிறோம். ஒவ்வொரு பறவையும் அதற்கான வாழிடங்களில்  மட்டுமே வாழக்கூடியவை ஆகும்.  மரங்கள் வெட்டுகையில் மரங்கள் சார்ந்த பறவைகளும், நீர்  நிலைகள் சிதைக்கையில் நீர்வாழ் பறவைகளும் பெருமளவில் அழிகின்றன. புற்கள் மற்றும் புத்தர் செடிகள் பட்டுமே இருக்கும் நாம் எதற்கும் உதவாத புறம்போக்கு நிலங்கள் என்று வரையறுக்கும்  நிலப்பகுதிகள் தான் பல்வேறு தரை வாழ், புதர் வாழ் பறவைகளுக்கு வாழிடங்களாக உள்ளன. (ஆள் காட்டி, கெளதாரி,காடைகள், ராபக்கிகள் etc)

கட்டுமானங்கள் பெருகுவதால் இத்தகைய வாழிடங்கள் பெருமளவு சுருங்கி வருகின்றன. இது பறவைகள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உயிர் சூழலுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. நீர் நிலைகளை பொறுத்த வரை அசுத்த நீர் கலப்பதும், குப்பைகள் கொட்டுவதும் அங்கு உயிர் சூழல் கெட போதுமானதாக உள்ளது.

இன்றைய பறவைகள் வாழிடம். நாளைய குடியிருப்புகள்

அரண் மற்றும் பறவைகள் :

அரண் அமைப்பு பறவைகள் தொடர்பான பல ஆக்கபூர்வமான செயல்களை செய்து வருகிறது. திருப்பெரும்புதூர் அருகில் உள்ள நீர் நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு, பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு பறவைகள் பற்றி அறிந்து கொள்ளும் வண்ணம் பறவை நடை நிகழ்வுகள், பள்ளி-கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்ற செயல்கள் செய்து வருகிறது. அதுமட்டும் அல்லாமல் அரண் வளர்த்து வரும் எழில்வனம், சுந்திரவனம் குறுங்காடுகள் பறவைகள் எந்த தொல்லையும் இல்லாமல் வாழக்கூடிய வாழிடங்களாக விளங்கி வருகின்றன. அங்கிருக்கும் மரங்கள் பெரிதான பின் மரங்களை திருப்பெரும்புதூர்  பகுதிகளில் பரப்பும் பணியை அவை எடுத்துக்கொள்ளும். பறவைகள் உலகு எனும் அற்புத உலகை அறிந்துகொள்ள அரண் அமைப்புடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

(அரண் 2ஆம் ஆண்டு மலரில் வெளியான கட்டுரையின் விரிவான வடிவம்)

Saturday, June 10, 2023

வரிமார்பு கருங்காடை (Barred Buttonquail)

பறவைகளை கவனிக்க துவங்கிய இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் காடை வகையில் எந்த பறவையையும் பார்க்க முடியாமல் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் வீட்டின் அருகேலேயே புற்கள் மற்றும் புதர்கள் உள்ள ஒரு இடத்தில் காடைகளை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. 

ஆனால் அடையாளங்களை கவனிக்கும் வகையில் பார்க்க முடியவில்லை. குறிப்பிட்ட நேரம், இடம் சென்றால் பெரும்பாலும் பார்த்துவிடலாம். ஆனால் அடையாளங்களை உள்வாங்கவோ, புகைப்படம் எடுக்கவோ நேரம் கொடுக்காமல் மறைந்து விடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் இவர்கள். கால்களுக்கு மிக அருகில் இருந்து திடீர் என்று பறந்து அதிர்ச்சி தருதல், நம்மை பார்த்த உடன் விறு விறு என அருகில் இருக்கும் புதர்களுக்குள் அடைக்கலம் ஆகுதல் என பல நாட்கள் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தது. 

ஒருவழியாக சில நாட்கள் முன் அடையாளங்காணும் வகையில் ஒரு புகைப்படம் எடுக்க முடிந்தது. அதைக்கொண்டு என்ன இனம் என்றும் கண்டுபிடித்தாகிவிட்டது. 

 வரிமார்பு கருங்காடை (Barred Buttonquail) தான் அது. 

 Buttonquail இனப்பறவைகள் காடைகள் போலவே தோற்றத்தில் இருந்தாலும், பெயரில் காடை என இருந்தாலும் இன வகைபாட்டில் இவை காடையினத்தில் சேர்க்கப்படுவதில்லை. IUCN தகவல்படி உலகளவில் இப்பறவைகளின் எண்ணிக்கை ஒரளவு உயர்ந்து வருகிறது. ஆனாலும் தமிழ்நாட்டில் எணணிக்கை உயர்கிறதா என்பது தெளிவில்லை. 

 புற்கள் மற்றும் புதர்களை வாழிடங்களாக கொண்டிருக்கும் இப்பறவைகள் காக்கப்பட இதன் வாழிடங்கள் காக்கப்பட வேண்டும். 

 (இந்த பறவைகள் பார்த்த இடம் திருப்பெரும்புதூர் அருகில் பல வருடங்கள் முன் வீட்டு மனைகளாக பிளாட்கள் போடபட்டு அந்தளவு கட்டுமானங்கள் இல்லாத இடம். புற்களும் முட்செடிகளும் அதிகளவில் உள்ளன. ஆனால் தற்போது விருவிருப்பாக கட்டுமானங்கள் வந்துகொண்டிருக்கும் இந்த இடம் இபபறவைகளின் வாழிடமாக இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்க முடியும் என்பது கேள்வி)